நாம் உடனே அந்த மாணவியைத் தொடர்புகொண்டு பேசினோம். 200க்கு
194.5 கட் ஆப் பெற்றிருக்கும் கவிதா பொறியியல் பயில
விரும்புவதாகவும்,மேலும் தமிழ்நாட்டில் எந்த கல்லூரியில் சேர்ந்து
படிக்கவும் தயார் என்றும் கூறினார். இதுகுறித்து தேனியில் சுந்தரபாண்டியன்
ஷூட்டிங்கில் இருந்த இயக்குனர் சசிகுமாரிடம் தகவல் சொன்னோம். கவிதாவின்
ஏழ்மை நிலையை வெளியுலகுக்குக் கொண்டுவந்த கத்தரிப்பட்டி கிராமத்தைச்
சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் பேசி, அவருடைய முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்த
சசிகுமார், கவிதாவுக்கான அனைத்து செலவுகளையும் தானே ஏற்பதாக உறுதி
கூறினார்.
கத்திரிபட்டி அரசு நடுநிலை பள்ளியில் படித்த கவிதா, அடுத்து, கொளத்தூர்
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்தார்.
எஸ்.எஸ்.எல்.சி.,யில், 426 மதிப்பெண் பெற்ற கவிதா, மேட்டூர் தனியார்
பள்ளியில் ப்ளஸ் - 1 சேர்ந்தார். ப்ளஸ் 2 தேர்வு முடிவு கடந்த மாதம்
வெளியானது. இதில், கவிதா தமிழில் 187, ஆங்கிலத்தில் 167, கணிதத்தில் 197,
இயற்பியலில் 186, வேதியியலில் 198, உயிரியலில் 184 என மொத்தம், 1,119
மதிப்பெண் பெற்றார். மேற்படிப்பு படிக்க வைக்க வசதி இல்லாததால்,
கவிதாவுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்திருக்கின்றனர். இன்ஜினியரிங்
கட்-ஆப் 194.5 இருப்பதால், கண்டிப்பாக உயர்கல்வி பயில வேண்டும் என்பதில்
கவிதா உறுதியாக இருக்கிறார். இந்த உறுதியை மனமுவந்து பாராட்டிய சசிகுமார்,
கவிதாவின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொன்னார்.
அடுத்தபடியாய் கவிதா பொறியியல் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளவும், அவர்
விரும்பும் கல்லூரியில் சேரவும் 'கரங்கள்' தக்க நடவடிக்கைகள் எடுத்து
வருகிறது. தத்தளித்த மாணவியின் துயர் இப்போது ஆனந்த பெருமூச்சாக மாறி
இருக்கிறது.